Sunday, December 4, 2016

Filled Under:

முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ அறிக்கையி்ல் தகவல்


தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ அறிக்கையி்ல் தகவல்
சென்னை:

முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்பல்லோ டாக்டர்கள் குழுவினர், லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக், கில்நானி மற்றும் சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் மேரி சியாங், சீமா, ஜூடி ஆகியோரும் தீவிர சிகிச்சை அளித்தனர்.

டாக்டர்கள் குழுவினர் அளித்த தீவிர சிகிச்சையினால் அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதையடுத்து லண்டன் டாக்டர் மற்றும் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் திரும்பிச் சென்றனர். அதன்பின்னர், சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் மேரி சியாங், சீமா, ஜூடி ஆகியோர் சென்னைக்கு வந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர்கள் மூலம் ஜெயலலிதாவுக்கு உடற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் நேற்று மீண்டும் சென்னை வந்தனர். நேற்று காலை 8.30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அவர் எடுத்துவரும் சிகிச்சை குறித்தும் அப்பல்லோ டாக்டர்கள் குழுவினருடன் கலந்து ஆலோசித்தனர். அப்போது ஜெயலலிதா முழுவதுமாக உடல்நிலை தேறிவிட்டார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை திடீரென அவசர சிகிச்சை பிரவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் ‘‘முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதய, சுவாசயியல் நிபுணர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment