Wednesday, November 9, 2016

Filled Under:

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு : மக்கள் சென்ற இடமெல்லாம் திண்டாடிய பரிதாபம்

Rs 500, Rs 1000 notes that the declaration is not valid: the dispersion of the population, struggling awful

சென்னை : நாடு முழுவதும் ரூ.500, ரூ.1000 செல்லாது என்று திடீரென்று அறிவித்துள்ளதால், மக்கள் சென்ற இடமெல்லாம் திண்டாடினர். பிரதமர் மோடி, நேற்று இரவு திடீரென்று டிவியில் பேசினார். அப்போது கள்ள நோட்டுகள், கருப்பு பணத்தை ஒழிக்க ரூ.500, ரூ.1000 நோட்டுகள் நேற்று இரவு முதல் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். திடீரென அறிவிக்கப்பட்டதால், மக்கள் அவதிக்குள்ளாகினர். தற்போது ரூ.500, ரூ.1000 நோட்டுகள்தான் அதிகமாக புழக்கத்தில் உள்ளன. ஏடிஎம்மில் ஆயிரம் ரூபாய் எடுத்தால் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டோ, 2 ரூ.500 நோட்டு அல்லது ஒரு ரூ.500 நோட்டு, 5 ரூ.100 நோட்டுக்கள்தான் வரும். இதனால் செல்லாது என்று அறிவித்த நோட்டுகள்தான் சாதாரண மக்களிடம் உள்ளன. அந்த நோட்டுகள் நள்ளிரவு முதல் செல்லாது என்று அறிவித்ததால், பலர் உடனடியாக கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கினர்.

முதலில் பொருட்களை கொடுத்த கடைக்காரர்கள், பிரதமரின் அறிவிப்பு குறித்த தகவல் தெரிந்த பிறகு, அவர்களும் அந்த நோட்டுக்களை வாங்க மறுத்து விட்டனர். அதன்பின் ஓட்டல்களுக்கு சாப்பிடச் சென்றவர்களிடம் அங்கும் பணத்தை வாங்க மறுத்து விட்டனர். இதனால் பல இடங்களில் ஓட்டல்காரர்களுடன் வாடிக்கையாளர்கள் தகராறு செய்தனர். மேலும், பெட்ரோல் பங்க்குகளில் இந்த நோட்டுக்களை மாற்றலாம் என்று அறிவித்து விட்டதால், அங்கு சென்றனர். அங்கு சில இடங்களில் வரிசையில் நின்று பெட்ரோல் போட்டனர். கூட்டம் நேரத்துக்கு நேரம் அதிகரித்தபடியே இருந்தது. இதனால், பல இடங்களில் பெட்ரோல் தீர்ந்து விட்டது. சில்லரையும் தீர்ந்து விட்டது. இதனால் பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. இதனால் உண்மையிலேயே பெட்ரோல் வேண்டும் என்று வந்த வாகன ஓட்டிகள், லாரிகள், வேன்கள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் பெட்ரோல் இல்லாமல் அவதிப்பட்டனர்.

மளிகைக் கடைகள் நேற்று இரவு மூடப்பட்டன. இன்று காலையில் கடைகளை திறந்தவுடன் பல வாடிக்கையாளர்களும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்ற முயன்றனர். தெரிந்தவர்களிடம் மட்டுமே அவர்கள் பணத்தை வாங்கினர். மற்றவர்களிடம் வாங்காமல் திருப்பி அனுப்பி விட்டனர். இதே நிலைதான், கோயம்பேடு உட்பட பல மார்க்கெட்டுகளிலும் நடந்தது. இதனால் விற்பனை பாதிக்குப் பாதி குறைந்தது. மெடிக்கல் ஷாப்புகளிலும் பணத்தை வாங்க மறுத்ததால் பலர் மருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதனால் சீக்கிரமாக கடைகள் அடைக்கப்பட்டன. ஆட்டோக்கள், டாக்சிகள், ஆம்னி பஸ்களில் இந்த நோட்டுக்களை வாங்க மறுத்தனர். இதனால், அங்கும் பொதுமக்கள் தகராறில் ஈடுபட்டனர். வெளியூர்களில் நேற்று இரவு பிரதமரின் அறிவிப்புக்கு முன்னர் ஆம்னி பஸ்களில் புறப்பட்டவர்கள் காலையில் சென்னையில் இறங்கியதும், ஆட்டோக்களில் ஏற முயன்றவர்களிடம், சில்லரை வேண்டும் என்று கேட்டதால் அங்கும் தகராறு ஏற்பட்டது. இதேநிலைதான் ஒவ்வொரு ஊரிலும் ஏற்பட்டது.

0 comments:

Post a Comment