Thursday, October 6, 2016

Filled Under:

உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டன: மாநில தேர்தல் ஆணையம்


உள்ளாட்சி தேர்தலுக்கான நன்னடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டன: மாநில தேர்தல் ஆணையம்
சென்னை:

தமிழக உள்ளாட்சி தேர்தலில், எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று கூறி ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன், ‘இடஒதுக்கீடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தார். ஆனால், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி வெளியிடவில்லை என்றும் இந்த சட்டத்தை அப்பட்டமாக மீறி தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கருத்து கூறினார். பின்னர், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தும் கடந்த 4-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று மேல்முறையீடு செய்தது. அந்த மேல் முறையீட்டு மனுவில், ‘அனைத்து சட்ட விதிகளையும் பின்பற்றித்தான் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கை தொடங்கி விட்டால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கை வேட்புமனு பரிசீலனை வரை வந்து விட்டது. தனி நீதிபதி உத்தரவினால், தேர்தல் நடவடிக்கை அனைத்தும் தற்போது அப்படியே நின்று விட்டது. எனவே, தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்த நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக நாளை (இன்று) பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். அதன்படி, இன்று பிற்பகல் விசாரணை நடைபெற்றது. அப்போது, தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தடைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படாததால் நன்னடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘உள்ளாட்சி தேர்தல் வழக்கு விசாரணை முடிந்த பிறகே அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும்’’ என தெரிவித்தார்.

Post by:vkalathur kalam 

0 comments:

Post a Comment