
பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சுங்கச்சாவடியில் 160-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், சுங்கச்சாவடி நிர்வாகத்தினர், ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று முறையான பேச்சுவார்த்தை நடத்தாமல், காலம் தாழ்த்தி வருவதாக ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் சுங்கச்சாவடியில் வசூலித்த சுங்கப் பணத்தை நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல் முடக்கி வைத்து கொண்டு, ஊதிய உயர்வு மற்றும் ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
மத்திய அரசு நிர்ணயித்தபடி 72 நாள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, திடீர் வேலைநிறுத்தம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால், திருமாந்துறை சுங்கச்சாவடியில் சுங்க வரி வசூல் செய்யாததால், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அனைத்து வாகனங்களுக்கும் எவ்வித கட்டணமும் இன்றி அனுப்பப்பட்டன.
இதுகுறித்து ஏஐடியுசி தொழிற்சங்க செயலர் விஜயகுமார் கூறியது: சுங்கச்சாவடி நிர்வாகம் முறையாக ஊக்கத் தொகை குறித்து அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், சுங்கச்சாவடி நிர்வாகத்தின் உள்ளே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றார் அவர்.
0 comments:
Post a Comment