Friday, September 30, 2016

Filled Under:

ஜுமுஆத் தொழ குறைந்தது நாற்பது பேர் இருக்க வேண்டுமா?

            தினம் ஒரு ஹதீஸ் -302

“ஹஸ்முன் நபீத்” என்ற இடத்தில் முதல் ஜுமுஆத் தொழுகை நடைபெற்ற போது நாற்பது பேர் இருந்தோம் என்று கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் தமது மகன் அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்களிடம் தகவலுக்காகச் சொன்ன செய்தியை (அபூதாவூத் 1069) சிலர் ஆதாரமாகக் கொண்டு குறைந்த பட்சம் நாற்பது நபர்கள் இருந்தால் தான் ஜுமுஆத் தொழ வேண்டும் என்று கூறுகிறார்கள். அதில் அங்கு நடந்த ஜுமுஆவில் நாற்பது பேர் தொழுதோம் என்று அன்றைய தினத்தில் தொழுதவர்களின் எண்ணிக்கையைச் சொல்கிறதே தவிர, இவர்கள் வைக்கும் அர்த்தம் அல்ல, அன்றைய தினத்தில் நான்கு நபர்கள் இருந்திருந்தால் நான்கு என்று சொல்லியிருப்பார்கள். மற்ற தொழுகைகளில் எப்படி இருவர் இருந்தாலே அது ஜமாஅத் தொழுகையாகி விடுமோ அதே போல் தான் ஜுமுஆவுக்கும். நபி (ஸல்) அவர்கள் 12 நபர்களை வைத்தும் ஜுமுஆ தொழுதுள்ளார்கள். (குறிப்பு: இதை வைத்து எவரேனும் பன்னிரெண்டு நபர்கள் இருந்தால் தான் ஜுமுஆ தொழ வேண்டும் என்று கூறுவார்களேயானல் அதுவும் தவறே…)




நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்று விட்டனர். பன்னிரெண்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை. இந்த நேரத்தில் தான்,(முஹம்மதே!) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்” (62:11) என்ற வசனம் இறங்கியது.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 936


Post by:vkalathur kalam 

0 comments:

Post a Comment