Sunday, October 9, 2016

Filled Under:

பாஜக போன்ற மதவாத கட்சிகளை புறக்கணிக்கபவர்கள் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும் லக்னோ மாநாட்டில் மாயாவதி பேச்சு


லக்னோ,

உத்தரபிரதேசம்,பஞ்சாப்,உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2017) தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக அளவில் 403 சட்டமன்ற தொகுதிகளை உத்தரபிரதேச மாநிலம் கொண்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் ஆட்சியை தக்க வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரசும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இதனால் அங்கு 4 முனைப்போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராமின் 10-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் லக்னோ நகரில் பிரமாண்ட பொதுகூட்டம் நடைபெற்றது. இந்த பொதுகூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

வரும் 2017ம் ஆண்டு உத்தரபிரதேசம்,பஞ்சாப்,உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும். பாஜக போன்ற மதவாத கட்சிகளை புறக்கணிக்க நினைப்பவர்கள் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு ஒருவேளை ஓட்டுப் போட்டால் எந்த வித மாற்றமும் நிகழாது.

வளர்ச்சி வேண்டும் என்றால் வரும் சட்ட சபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியினரை உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநில மக்கள் ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

0 comments:

Post a Comment