பெங்களூரு: பெங்களூருவில் நடந்த வன்முறையின் போது கே.பி.என்., நிறுவன பஸ்கள் எரிக்கப்பட்ட வழக்கில் 7 பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு பெண் உட்பட 10 பேரை தேடி வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதை எதிர்த்து, கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் கடந்த 12-ம் தேதி வன்முறையில் ஈடுபட்டனர்.

பெங்களூருவில் மைசூரு சாலையில் உள்ள டிசவுசா நகரில், தமிழகத்தை சேர்ந்த கே.பி.என் நிறுவனத்துக்கு சொந்தமான 42 பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பஸ்களுக்கு கன்னட அமைப்பினர் தீ வைத்ததில் 42 பேருந்துகளும் எரிந்து நாசமாயின. கே.பி.என் நிறுவன பஸ்கள் உட்பட பெங்களூருவில் 200-க்கும் மேற் பட்ட தமிழக வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக கே.பி.என்., நிறுவன ஊழியர் வெங்கடாசலம் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கே.பி.என் நிறுவன ஊழியர்கள் எடுத்த வீடியோ மற்றும் ஊடகங்களில் வெளியான வீடியோ ஆதாரங்களும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் டிசவுசா நகரை சேர்ந்த ரக் ஷித் (19), சந்தன் (19), சதீஷ் (27), லோகேஷ் (25), கிரண் கவுடா (27), கெம்பேகவுடா (28), பிரகாஷ் (46) ஆகிய 7 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143 (சட்ட விரோதமாக கூடுதல்), 147 (கலவரம் செய்தல்), 427 (சேதம் விளைவித்தல்), 324 (பயங்கர ஆயுதங்களால் தாக்குதல்), 435 (தீ வைத்து எரித்து பெரிய இழப்பு ஏற்படுத்துதல்) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைதான 7 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வன்முறையை நேரில் பார்த்தவர்கள் அளித்த சாட்சியம் மூலம், இதில் ஒரு பெண் உட்பட மேலும் 10 பேர் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள 10 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்