Wednesday, September 14, 2016

Filled Under:

வேப்பந்தட்டை அருகே பசும்பலூரில் கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் ; கல்வீச்சு: காவலர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே தேர் வெள்ளோட்டம் விடுவது தொடர்பாக, இரு சமூகத்தினரிடையே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலின்போது கல்வீசித் தாக்கிக்கொண்டதில் காவலர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூர் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு கோயில் தேர் வெள்ளோட்ட விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேரை ஒரு சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் இழுத்தனர். மாரியம்மன் கோயில் அருகே தேர் வந்தபோது, மற்றொரு சமூகத்தினர் தேரை இழுக்க முயற்சித்தபோது, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது.
இரு சமூகத்தினரும் கல்வீசித் தாக்கிக் கொண்டனர்.
இதில் ஒரு சமூகத்தை சேர்ந்த சின்னசாமி மகன் மணிவேல் (26), மாரிமுத்து மகள் இந்திரா (7), தன்ராஜ் (31) மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் காவலர் அன்புச்செல்வி (25) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும், பசும்பலூர் கிராமத்தில் பதட்டம் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment